Saturday 17 October 2015

முருக பூபதியின் " மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி "

@ மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி @

கோமாளிகளின் வாசத்தை பூமி காற்றோடு பறத்தவிட்டிருக்கிறது.
கோமாளி என்பவர்களின் மறுபக்கமெனும் அகத்தில்
பிரபஞ்சம் புரிந்திடநினையாத ஒரு மாபெரும் பிரம்மாண்டத்தை ஒழித்துவைத்துள்ளது.
சகக்கோமாளிகள் உறிஞ்சும் காற்றைத்தான்
முகமூடிஇல்லாத நம்உரு உண்டுகொண்டிருக்கிறது .
கோமாளிகளின் சாமாணிய பூமியொன்றில்தான்
இனி இந்த பாமரவிரும்பியும் ..

செம்புழுதி பறந்து எரியும்
இந்த நாடகநிலத்தில்தான்
கோமாளிகளின் வியர்வைத்துளிகள்
கலையையுண்ற மகிழ்வில் மரணிக்கின்றன.
சாயங்களால் கோரத்தாண்டவமாடும் கோமாளிகளின் அப்பாவி முகத்தினுள்
ஒரு குழந்தையும் தெய்வமும் மறைந்தே அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
கலையெனும் நரம்பு புடைத்து
சதைவீங்கி எழுந்த உடல்மயிர்களின் உச்சமே
கலைநயத்திற்கு கிரீடமனிந்து நிமிர்ந்த கோடியுயிர்களின் வளர்ச்சி.
கண்ணாடியின் மிருதுவினுள்
தவக்காதலியான கொறத்தியின் கூசும்புன்னகையை
தேடித்திரியும் ஒரு நாடோடிக்கோமாளியின் இயல்பை
பிரபஞ்சந்தில் எந்த உயிரும் இதுவரை தேடியதில்லை.
தன் ஜென்மத்திற்கான ஒருத்தியை
மயானத்தில் வினவித்திரியும் கோமாளியின் கண்களுள்
வீரியம் வழிந்தோடிகிறது.
ஓலைக்கூடைகளுக்கு கைகால் முளைத்து
புழுதிபடிந்து பறந்துவழிந்த
அவலத்தின் நீண்டச்சாயலொன்றை
பம்மியவெளிச்சத்தின் தெளிந்தகாட்சியாய் தரிசிக்கும்போது
கண்களுக்கான சிரிப்புவொன்றை
உணரமுடிகிறது.
இசையின் முடிச்சொன்றில் பிண்ணிய
இறந்தவளின் மெல்லிய ஓலத்தை
காதுகள் காணநேர்கிறகணம்
ஒரு மாயையொன்றின் உருவை
உருவகித்து தரிசிக்கிறது.
கோரஅவலத்தின் நீண்டகாட்சியங்கள்
தீண்டித்திரியும் உயிரின்உயிரை
ஒரு கோமாளியின் முகம் அப்பட்டமாக்குகின்றன.
உயிரும் உணர்வும் இல்லாத
பொம்மைகளின் உடம்பை சூடும்மாயாவிகள்
கோமாளிகளின் வியர்வையில் முளைத்த உயிராகவே தெரிகிறார்கள்.
ஆஷா என்கிற கோமாளியின் ஒப்பாரியில்
ஒரு உயிருள்ள மானுடக்காதல் வேண்டித்திரியும் பூரணத்தை
ஓலத்தோடு திரியும் கதறலின் அழுகைமொழியை
பொம்மைகளும் கோமாளிகளும் நாமும்
உணருகின்ற ஒருபெருவலியில்
பிரபஞ்சத்தின் அடியில் நான் அழுதுகொண்டிருந்தேன் என்பதே நிஜம்.

ஒரு கலைக்கான மகத்துவத்தை
உள்ளுணர்வை வெளிக்கொணரும் திறனை
வலியின்வலியை உணர்த்துகிற கலைநோக்கத்தை
தலைவணங்குகிற எனுக்குள்ளான என்அகத்திற்கு
பூரணமகிழ்வையும் நிறைந்த கொண்டாட்டத்தையும் வழங்கிய
முருகபூபதி மற்றுமான கோமாளிகளுக்கு
என் கரைபடியாத முத்தங்கள் .

இனி,
என்னுள்ளான ஒரு கோமாளியைத்தேடி ..

- அதிரூபன்  .

No comments:

Post a Comment