Wednesday 25 November 2015

இரவு அவ்வளவு சௌகர்யமானது

நீளிரவிற்கு லாவகமான இசை
ஒரு நரியின் ஊலையின் ஓலமாக
வனத்தின் இருட்டு கிழித்து
இந்த வெள்ளை ராத்திரியின் முச்சந்தியை
தொற்றுப்போகிறது

கதவுகளுக்கு வெளியே தள்ளப்பட்ட
குடிகார கணவனின் நிலையை,
ஆறுவயது மகள்
விழித்திருந்தே காட்சியமைக்கிறாள்

இருளின் சாயலொரு நிழலொன்று
கோயில்வீதியின் பாதை தடங்களில்
உலாவுகிறச்செய்தி,
கௌரி அக்காவின் கனவில்
ஏதோவொன்றை உலறிவிட்டுப்போகிறது

நிலவுக்கும் நட்சத்திரத்திற்குமான இடைவெளி
மயாணத்திற்கும் மந்தைவீடுகளுக்குமான இடைவெளியோடு
ஒப்ப இருக்கிறது

ரயிலில் தற்கொலை செய்துக்கொண்ட
அமுதா அக்காவின் நினைவு,
பட்டணத்திலிருந்து
கிராமம் வந்துகொண்டிருக்கிற
வேறொரு ரயிலோடு
ஏதோ பேசிக்கொண்டிருக்கிறது

பனியில் வேர்த்திருக்கும்
எல்லை சாமியாரின் அரிவாளில்,
எப்போதோ இரவு முத்தமிட்டிருக்கிறது

மலையின் மேலே எறிந்துகொண்டிருக்கிற
அந்த ராடச்சஷ நெருப்பு,
ஒரு கடவுளின் கோபத்தை
பற்றவைத்திருக்கிறது

இரவுகளோடு விழித்திருக்கிற
இந்த பெரும்அமைதி,
இருளின் மடியிலே
உறங்கிக்கொண்டிருக்கிறது

இரவு இரவாகத்தான் இருக்கிறது.
பகலை கொலைசெய்த பாவத்திற்காகத்தான்
இத்தனை அழகாகவும் இருக்கிறது..

- ச.விவேக்.

Monday 23 November 2015

மழையைப்போலத்தான் அவளும்

மழையைப்போலத்தான் அவளும்

அந்தரங்கச்சுகத்தின்
நீர்மையின் குளிரில் வசீகரிக்கப்படுகிற குளிர்மை
இம்மழையின் அனைத்து பொத்தல் இருப்பிலும்
துளிநெழிவை உடுத்தியிருக்கிறது

வெள்ளை மழைக்காக
ஏங்கிய பருவம்,
இப்போது 
மழைக்காதலியின் பெயரோடு
நேற்றைய காலத்தின் இளமையோடு
மழைமழையாய் திரிகிறது
ஒரு பருவப்பெண்னென

கண்ணாடி நிற மழை
ஒரு துளியின் அதிர்வில் உடைந்துபோய்
உடம்பின் பள்ளமேடுகளில்
புரண்டும் ஊறிக்கொண்டும்
தன்நிறப்பொழிவோடு 
குதூகுளிக்க ஆயத்தமாயுள்ளது

சன்னல் விழிகளில்
ஒரு மழைச்சாரலின் கதகதப்பு உரச
ஈரரேகைகளோடு தெளிந்ததேகம்
மழையைப்போர்த்திக்கொள்ள
கைகுட்டையை விரிக்கிறது

பெண்ணென உருமாறிய இம்மாமழை
அதன் ப்ரியராகங்களை,
இருளடர்ந்த இச்செவிட்டு செவியில்
புறாஇறகின் மயிறிலையாய் நுழைகிறது

தேகம்சுடும் இந்த மழைக்குளிர்மை
அவளின் விரல்நிகங்களின் தொடுதலாய்
இப்பேரண்டத்தின் ஆதிமடியை
முத்தமிடுகிறது

எல்லாமொழி பேசும்
இந்த மழையின் வாய்
அழுதும் சிரித்தும் கொண்டிருக்கிற
இம் மாகணம்,
அவள் அவளுக்கான உடையைத்தேடி
மழையை அணிந்துகொண்டாள்

அவள்
கார்காலத்தின் தேவகணப்பட்சி.

இம்மழையின் கந்தலை
கூந்தலில் முடிந்திருக்கிற இவள்,
மழையுமானவள்...

- இலக்கியன் விவேக்

Saturday 21 November 2015

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

உயிர் ஒழுகி ஓடுகிற வெளி

-------------

பிறஉயிர் நிழல்படாத மரத்தின் சருகுகளாய்
காய்ந்த உயிரின் மீது படர்ந்திருக்கிறது
மனிதஉயிரின் கடைசிப்பிரியம்

கால்தடம் தீண்டாத
கடைசியப் பொதுவெளியில்
உயிருக்கான தீண்டலை அழைத்துச்செல்கிறது
ஒரு தீவிரவாதத்தின் காதல்

அந்நிய காற்றின் வெப்பம்
நுரையீரலின் சதையில் துளையிடும்போது
பசியும் பிணியும்
இருதயத்தில் அமர்ந்து ஊசலாடும்

ஊமைமொழி பேசி
கண்ணீரின் குளிருக்கே சூடுதேடும் தேகம்
எனக்கான ஒரு கதகதப்பை
எந்த தேசத்தில்
எந்த மாதுவின் மறைபொருளை
திறந்துவைத்திருக்கிறது

நம்மைப்போல்
இருப்பு தேடித்திரியிம்
ஓடுகிற நீரின் கடைசிய அமர்வை
எந்த வெளியில் நிறுத்தியிருக்கிறது
இந்த மனிதவெளிப்பள்ளம்

தனிமனித இயல்பு நிலை
எந்தவொரு உயிரின் சுவையை
நாவில் அமர்த்தி ருசித்து
தேகம்வளர்க்கும் ஆதியின் வழக்கத்தை
எனக்கு கற்பித்த இறை
எந்த உடம்பின்மீது மேயத்தொடங்கியிருக்கும்

அகத்தின் கோணப்பார்வையின் சாட்சியங்களுக்கு
எந்த வகையான நோய்பிடித்து
எந்த விதமான காட்சிப்பேரலையை
உடம்புக்கும் உயிருக்கும் ஒட்டாத இடத்தில்
உறங்கவைத்திருக்கிறது

மீன்குஞ்சுகளின் நாவினில்
புழுவின் சதைக்கறியின் பிரியத்தை
எந்த வகையான பசி
நிர்ணயித்தது

உயிர்திண்டு உயிர்வாழும்
பிற உயிர்களின் மீதான பசிக்காதலை
மனிதவெளியின் புறப்பார்வைக்குள்
ஒட்டிவைத்திருக்கிற ஆறாம்அறிவு
எந்த விதமான மிருகம் ..??

- ச.விவேக்

Wednesday 18 November 2015

இசையெனும் இம்சை

மழையின் ப்ரிய ராகமொன்று
எனக்கு பரிட்சயமான குரலை
ஒருத்துளியின் அதிர்வில்
மெல்லிய சப்தத்திற்கினங்க
ஏதோவொன்றின் உயிரை
விழுங்கியபடி கேட்கிறது

செவிப்புலனின் துவாரஇருட்டிற்குள்
பம்மிய வெளிச்சத்தின் அடரில்
மெல்லியலோசை விழுந்து எழ
அதிகொஞ்சமாய் நனைந்திருக்கிறது
இருளில் சிக்கிய இசை

வனாந்திர காட்டின்
இலைஒன்றின் மேல் படரும் இசை
முயல்குட்டியின் கால்தடங்களில்
மூச்சிழைத்து விம்மிக்கொண்டிருக்கிறது

இருட்கதவுகளுக்குள்
அரும்பத் தொடங்கி
இறுக அணைக்கும் ஓசையின் நிறத்தில்
வெக்க ரேகைகளை படியச்செய்திருக்குறது
அணைப்பின்  கதகதப்பு

இலையுதிர்பொழுதில்
கிளைகளிலிருந்து உதிரத்தொடங்கும்
சருகுகளின் முறிவில்
சிணுங்கி சிணுங்கி கீழே குதிக்கிறது
சருகு குலைத்த இசை

கூடுடைத்து உயிர் துயில
கோழிக்குஞ்சுகளின் கண்விழித்தலில்
தாயின் இறக்கைகளூடான வெம்மை தேசத்தில்
பொட்டியினுள் அடைக்கப்பட்டிருக்கிறது
லோகம் தேடி அழையும் இசை

ஆட்டுக்குட்டியின் பசியை
சிறுவனின் மேய்ச்சலொன்றில் நிரப்பி
புற்களுக்குள் நாவிறக்கி லயிக்க
பனியுடலின் வெளியை
மேயத்தொடங்கியிருக்கிறது பசியின் இசை..

- ச.விவேக்