Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Friday, 8 July 2016

மழைக்காதலர்கள்

மழைக்காதலர்கள்

- - - - - - - - -

குளிரில் நடுங்கும் மர உருக்கள்
காற்றின் ரூபத்தை காதலிக்கத்தொடங்கின

அந்நாளில் ஒழுகிய வான்தூதுவர்கள்
தேவதைகளின் கரங்களில் இருந்து
ஆயுள்ரேகைகளை வாங்கிக்கொண்டு
மலைமுகடுகளில் முத்தமாய் வழிந்தோடுகின்றனர்

நிலம் பேசும் வான்துளிகளில்
மூதாதையர்களின் அழுகை

மழைத்துளியில் நனைகிற பழங்குடியின் குடில்களால்
நூற்றாண்டுகால ரகசியம் கமல்கிறது

காட்டின்மகள் நீராடுகிற தாமரைக்குளக்கரையில்
தவளைகள் இன்பமுறுகின்றன

தேவர்களின் எச்சிலால் ஒழுகிய வானம்
வனதெய்வத்தை நனைக்கிறது,
யுக ஆண்டுகளாய் இமைமூடியிருந்த கடவுள்
ஈரத்தழுவலால் ஒளி வீசுகிறார்

மழையில் மூழ்குகிற மரப்பாச்சி தேகமொன்று
காட்டுயிர்களின் காதுகளில்
காதல்சொல்லி பிரிகிறது .....

- அதிரூபன்

Wednesday, 29 June 2016

மரணத்தை புசித்து

மரணத்தை புசித்து

- - - - - - - - - -

தானிய நிலங்களில்
ஈரம் வற்றிப்போயிருந்தன

பசியின் வயிறுகளில் விழுந்த பள்ளங்களில்
சூரியன் உதித்தெரிக்கிறது

தாகத்தின் நரம்புகளை துளையிட்ட கதிர்கள்
மரணத்தின் மேனியை படுக்கையாக்கின

இறையை நம்பியிருக்கிற உயிர்கள்
அறுவடைகாலங்களில் பிணங்களை நடுகின்றது

இளவெயிலின் தாகம்
ஆறாமறிவுக்கடலை உறிஞ்சி
நெருப்பை உமிழ்கிறது

உயிர் கேட்கிற உணவு
இந்த நிலத்தின்
மனிதக்கழிவோடு அழிந்துபோனது

இறையான்மையின் கருணை
பிறந்த குழந்தையின் பட்டினிச்சாவைப்போல்
குப்பையில் கிடக்கிறது

உங்கள் நம்பிக்கைகள்
மழைநேர விண்மீனைப்போல

எப்போதாவது,
வானத்திலிருந்து
விழுகிற உணவுப்பொட்டலங்களில்
விஷம் இல்லையென்று நம்பிக்கை வைத்திருங்கள்

உங்கள் நிர்வாணங்களை
மாறிமாறி புசித்து நிரம்பிய வயிறுகளை
பசிக்கு பழக்கவேண்டாம்

நம்மைபோன்றவருக்கு
மரணம் பழக்கப்பட்ட ஒன்று ....

- அதிரூபன்

தூளிக்குள் உறங்கும் காடு

தூளிக்குள் உறங்கும் காடு

- - - - - - - -

சூன்யதேசத்தின் ஆதிக்கிழவி
இரவின் மையெடுத்து காடு வரைகிறாள்

நிலவின் நிழலில் ஆடும் தூளியொன்றில்
ஈன்ற பிள்ளையின் அழுகையை தூங்கவைக்க
காற்றுக்குள் குரல்நிரப்பி தாலாட்டுகிறாள்

வரைந்த காட்டுபூச்சிகளின் இரைச்சல்
காட்டுக்குள் மங்களம் பாடின
காற்றொலியில் தவழ்ந்த இசைபூச்சிகள்
தாலாட்டோடு கலக்கிறது

வனமெங்கும் பரவும் வரைதூரிகை
கிளையிடுக்கில் உதிர்ந்த சருகாகின
சருகுதிரும் சப்தத்தில் சிதறிய காடு
துயில்ந்த பிள்ளையின் கனவில் இசையாகிறது

புலன்நீட்டி நகர்கிற ஆமைக்குஞ்சுவின் பாதையில்
இறந்த காடொன்றின் அச்சு.
சாம்பல் மிதித்து நகரும் உடல்
இசைக்காற்றில் குழலூதுகின்றன

ஆதிக்கிழவி வரைந்து சிதறிய மைத்துண்டுகளை
பறவை அலகுக்குள் இடுக்குகிறது

காட்டோடும் இசையோடும் பறக்கும் பறவை
நிலவின் நிழலில் ஆடும் தூளியில்
துயிலும் பிள்ளையானது ..

- அதிரூபன்

வனா

வனா

- - - - - - - - - - -

காட்டுநீரள்ளி குரல்நனைக்க
தன்னை காற்றாக்கிக்கொண்டாள் வனா

காற்றுக்கு தேகம் பொருத்தி
காட்டுயிராக்குகிறாள் குளிரை

பச்சையத்திசைகளை மேயும் மோகம்
கூட்டுமரங்களின் உடலை அசைக்கிறது

காடு மலர்ந்து
காடு உதிர
வனத்தை கூந்தலில் பதுக்கி மகிழ்கிறாள்

நிலம் அதிர பெருகும் சப்தம்
பெருங்கூடொன்றின்
அலகில் இருந்து வழிகிறது

இலையில் இருந்து பெய்கிற
உறைந்த மழையொன்று
காட்டுக்குள் குளிர்நிரப்பி
காற்றுக்குள் கூடுகிறது

குகைமிருகங்களின் கூடல்
வெம்பாறையின் சூட்டில் நனைய
வனா இதமாய் சூடுரசுகிறாள்

மலைஇருளில் அசைகிற பச்சையப்பூ
பெருமழையுதிர்வில் நீர்நிறமாகி
காட்டுநிழலை நனைக்கிறது

மழைபெய்யாப் பொழுதின் காடு
வனாவின் தாகத்தில் உலர்கிறது

இசையென ஒழுகும் நீரருவிச்சப்தம்
நீளவால்குருவியின் சிறகிலிருந்து தெரிக்க
உதிர்ந்த நீரில் ஊறுகிறாள் வனா

நீரள்ளி குரல்நனைக்கிற நினைவு
வனாந்திர வெளியில் காய்ந்துகிடக்கிறது

காடெல்லாம் நீந்தநினைக்கிற
ஒருத்தியின் ஆசை
காட்டுப்பூக்களில் பூத்திருக்கிறது

இப்பொழுது
உயிர்களின் சப்தம்
வனா வனா !

- அதிரூபன்

Tuesday, 14 June 2016

வயிற்றில் உதிக்கும் சூரியன்

வயிற்றில் உதிக்கும் சூரியன்

- - - - - - - -

கடல்நீர் சுவைக்கிற நாக்கில்
தாகம் ஊறக்கண்டேன்

சூடு மேல் பூசுகிறது

நிர்வாணமாக்குகிறது வெயில்

மணல்குகைக்குள் புதைந்திட எழும் எண்ணத்தை
இந்த ஆதி நிர்ணயித்திருக்கிறது

நிலம் நீராகி தடங்கள் மூழ்கிய ஆழத்தில்
உடலை அமிழ்த்த நினைக்கிறேன்

கண்களின் குளிரை
பூமியில் இறக்கி
அதன் இருளில் கொஞ்சமாய் வாழவேண்டும்

கள்ளிச்செடியின் காய்கள்
சிறுகுடலின் பாதியிலும் நிரம்பவில்லை
பசிக்கிறது

வெயிலை குடித்து ஒழுகுகிற வியர்வை
பாலையின் ஒளியில் ஊற்றாகிறது

சிறுநீர் நனைத்த மணலை அள்ளி
என் உடலில் நீர்த்திருக்கிற சூரியன்மேல் பூசுகிறேன்
கடலில் மூழ்குகிற சூரியனுக்கு இந்தகுளிர் போதாமை தான்

கைகளை கால்களுக்கிடையில் கிடத்தி
முழங்கால் தலைதொடும் நிலையில்
சுருண்டு படுத்துக்கிடக்கிறேன்

ஒரு மிருகத்தின் நிழல்
வெயிலை மறைத்து அருகில் நிற்கிறது

என் வயிறின் பள்ளத்தில் விழுந்த சூரியனை
கொஞ்சமாய் கொஞ்சமாய் குருதியொழுக புசிக்கிறது
என் அருகாமை மிருகம் ...

- அதிரூபன்

Saturday, 11 June 2016

ஆகாசம் அருந்தி வாழும் நிலம்

ஆகாசம் அருந்தி வாழும் நிலம்

- - - - - - - -

காட்டின் வயதை பேசும் அடிமரம்
இலைவிரிப்பில் முகம் பார்க்கும் ஆகாய தேகம்
வனமெங்கிலும் அகம் நிருவும் உயிர்கள்
வாழ்வின் காரணத்தை மீட்டுகின்றன

இருளேறாத நிலவின் கண்களில்
ஒரு காடு பிறக்கிறதென கொள்வோம்

இறகு கூடொன்றில் குளிர் பூசுகிற நிலவு
பறவையின் பிரசவத்தில் பாதிவலியை சுகந்தமாக்குகிறது

வயிற்பெருத்து கர்பத்தோடு அமர்கிற தட்டான் தோகைகள்
தனிமையை மருத்துவத்திற்கு செலவாக்கும்

யானையின் காதுகள்
தடித்த மரத்தின் நிழலை விசுறுகின்றன
நிழலொதுங்கி வெய்யில் காய்ந்த நிலத்தில்
யுகாந்திரத்தை மேய்கிறதொரு துதிக்கை

முறிந்த மரத்தின் பட்டைகளில்
குடையென விரிகிறது காளான்பிஞ்சுகள்
இறந்த மரத்தின் உயிர்குடித்து வளர்கின்றன
குடைகாளான்கள்

காட்டில் பிறந்த பறவைகள்
மனதசப்தத்தில் பறந்து செல்கின்றன

தனிமையின் நிழலில் அமர்ந்து
மலைமுகம் காண்கிற விழிகள்
காட்டின் பூரணத்தில் அமிழ்ந்து சாவட்டும்

- அதிரூபன்

ருசி ஒழுகிய பொழுதில்

@ ருசி ஒழுகிய பொழுதில் @

பரீக்குட்டியின்
ப்ரணய ஜீவனின்
கடைசி துடிப்பு நிகழ்வு
ஒரு ஞாலத்தின் ஜென்மத்தை
குருதி ஒழுக வைக்கிறது

அகிலத்தின் பசிக்காக
ப்ரணய நாவின் சுவைக்காக
குடுவை உயிரின் மீதிக்காக
இச்ஜீவனின் கொலை
அகப்புனிதமாகிறது .

புல் தோகைகளை அறைத்து
கூழ் பழசு பல குடித்த,
என் பின்புழுக்கைகளை சுமக்க
இந்த விதிமண்டலத்தில் வழியில்லை .

ஏதோ ஒரு
புனித தேகப்பெருமூச்சு ,
என் பிந்தைய காலத்தில்
இல்லாமல் போயிருந்தால்,
நான் பிறவா பிறப்பே
அம்சமாய் இருந்திருக்கும் .

அழகுச்சொப்பணம்
அம்சப்பிரியம்
ஆடித்திரிந்த ஸ்பரிசம்
அசந்துபோன மரணக்களைப்பு
இவையே,
என் மரணத்திற்கு பிந்தைய மகிழ்வுகள் .

கருமை நிறைந்த என் சிறுநாக்கு
புல் திண்று பழகிய வரலாறு
இப்பேரண்டமே அனுமதித்த ஒன்று.

ஆட்டுக்குட்டியின் நாருசி
இறைச்சியை மதித்திருந்தால்
என்னவாயிருக்குமோ,
சில ஜென்மத்தின் நிலை .

பாவம் ,
பரீக்குட்டியின் ஆட்டுக்குட்டிக்கு
நம்மைபோல்
கொலை செய்யத்தெரியாது ..

- அதிரூபன்

Thursday, 26 May 2016

ஆதித்தனிமையின் ஈரம்

ஆதித்தனிமையின் ஈரம்

-------------

மிருகக் காலடிச்சூட்டை
என் நாசி நிரப்பி
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது

ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,
என்னுரு மாறி அலகு நீண்டு
முளைத்த கண்களில் காடு பறக்கிறது

ஸ்தூல தேகத்து மரமுடிகளை
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி
முகமுடியின் இருட்டுக்குள்
பதுங்கியிருக்கிற பிறையை
ஈரத்துணி எடுத்து அழிக்க
மாயையின் விரலில் மேகத்தடங்கள்

காரிருள் பொழுதின் காட்டில்
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது

மியாவ் மீசையில்
ஒட்டியிருக்கிற மாமிசவாடை
எலிக்குஞ்சுகளின் சுவையை
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...

- அதிரூபன்

ஆதித்தனிமையின் ஈரம்

ஆதித்தனிமையின் ஈரம்

-------------

மிருகக் காலடிச்சூட்டை
என் நாசி நிரப்பி
காடுதிண்ற மிச்சக்காற்றை பருகி
ஆதிக்கிழவியின் வெற்றுடம்பில் நீந்த
ஒரு மனித உடல் தேவையாய் இருக்கிறது

ஆதிமரநிழலில் விழுந்த தனிமையை கொறித்து
இருவாச்சிக்கூட்டின் இறகுப்பொதிக்குள் திணிக்க,
என்னுரு மாறி அலகு நீண்டு
முளைத்த கண்களில் காடு பறக்கிறது

ஸ்தூல தேகத்து மரமுடிகளை
ஆழவேரின் ஈரம்தொட்டு பின்னி
முகமுடியின் இருட்டுக்குள்
பதுங்கியிருக்கிற பிறையை
ஈரத்துணி எடுத்து அழிக்க
மாயையின் விரலில் மேகத்தடங்கள்

காரிருள் பொழுதின் காட்டில்
இருளின் வாசத்தை நுகர்கிற மதியில்
ஒரு புல்வெளி பூத்திருக்கிறது

மியாவ் மீசையில்
ஒட்டியிருக்கிற மாமிசவாடை
எலிக்குஞ்சுகளின் சுவையை
காற்றில் பரத்தவிட்டிருக்கிறது ...

- அதிரூபன்

ஈரவலியில் முளைத்த பூஞ்சைக்காளான்கள்

வலித்தடங்களின் ஈரம்

---------------------

முதிர்இலையின் மஞ்சள்முகம்
காட்டுநிழலின் தனிமையருந்தி
இரைப்பை நிரம்பி வழிகிற பசியால்
சல்லிவேரின் மார்பை பருகுகிறது

குழலூதி பசியருந்துகிற மூங்கில்காடு
பார்வையற்றவளின் உதடுகளால்
ஒலியின் ஊனத்தை வாசித்து
கானல்வெளியில் வெம்பிக்கொண்டிருக்கிறது

வலையோட்டையில் தப்பிவிடுகிற
மீன்குஞ்சுகள்
வற்றிய நதியில் மீன்களாகின

மழைநீரில் மூழ்கிய காகித மழலைகள்
பின்னொரு நாள்
கருகி சாம்பலாகின்றன
நீரின் தாகம் ஒரு வெயிலை பருகுகிறது

ஈரலின்சுவை உமிழ்கடலை பெருக்க,
செம்மறிக்கிடாவின் தோல்
மட்டைவேலியில் சொட்டிக்கொண்டிருக்கிறது

இரவில் உதிர்ந்த இரத்த வலியால்
விழித்திருக்கிற தனியொருத்தியின் கனவில்
உறக்கம் தற்கொலை செய்துகொண்டது ..

- அதிரூபன்

Saturday, 21 May 2016

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

- - - - - - - - -

தவளையின் குரல்வளைக்குள்
வியர்த்துப் பெய்கிற மழை
பின்னிரவில்
கூடாரப்பொதிசுமந்த நத்தையின் தேகத்தில்
ஈரத்தை உலர்த்துகிறது

பிசுபிசுப்பணிந்த உடற்நாவால்
சைக்கிள் தடங்களை வரைந்து செல்கிற உயிர்
சுருளியோட்டின் மாகுகைக்குள்
ஐம்புலனின் தாகத்தை கொண்டடைக்கிறது

இருளடர்ந்த நத்தை விழிகளுக்குள்
ஜஸ் ஈரத்தின் உரு ஊறுவது
மழைபோர்த்திய மணல்துகளென நெழிகிறது

இனம்தேடி கொம்பு நீட்டும்
பெருஉடலின் ஜவ்வுக்காமம்
ஒரு முதிர்சருகின் ஓசையில் ஒட்டிக்கிடக்கிறது

மழைமழையென வேண்டிதிரிந்த
இரவுநேரத்துக் கம்பளிக்குள்
ஒரு நத்தைக்குடும்பம்
காமம் உண்பது
மழைநீர் உறைநீராகும் காலம்வரை நீடிக்கும் ...

- அதிரூபன்

Saturday, 30 April 2016

நிழல் உதிக்கும் மலர்கள்

நிழல் உதிக்கும் மலர்கள்

- - - - - - -

தீவு நிலத்தில்
காணப்பெறாத மலரொன்றை
என் உள்ளங்கையின் ரேகைகளுக்குள் விளைவித்து,
நீ துயிலிழந்த படுக்கையறையில் பத்தரபடுத்துகிறேன்

மருதாணிக்காடொன்றில் தொலைந்துபோன ஜீவன்
என் உடலை விழித்திருக்கச் செய்கிறது
உன் படுக்கையறை மலரின் வாசம்
என் விழிகளில் வழிதேடுகிறது

நித்திரை அற்றுப்போன நம் விழிகள்
இருளின் பெரியமூங்கில் கூட்டொன்றில்
கனவுகளை ஈனுகின்றன
பிரசவித்த கனவுகளின் உடலில்
தீவுமலர்களின் வாசம்

மேகங்களின் காதுக்கருகில் நிலா உறங்குகிறது
அது உறங்கி உறைகிற இருளில்
மலர்கள் திசைகளை மேயத்தொடங்கின

நீர்காகமொன்றின் நிறத்தில்
ஒரு காடு விழிகளுக்குமேல் படர்வதை உணர்கிறேன்
என் இமைத்தாவரத்தில் உதிரத்தொடங்கிய பூவின்சாயல்
உன் படுக்கையறை மலரோடு கலந்திருக்கிறது

இருள் சரிகிற அதிகாலையின் வெயிலில்
தீவுநிலமலர் உன் கூந்தலுக்குள் நிழல் பரப்பும்

மீண்டுமாய் ஒருபெரும்வாசத்தில்

காட்டுக்குள் தொலைந்துபோனவனின் பாதையை
இந்தமலர் உனக்கு வழிகாட்டும் ..

- அதிரூபன்

Wednesday, 20 April 2016

இருளின் ஒலிமுகங்கள்

இருளின் ஒலிமுகங்கள்

- - - - - - - -

இரவின் மேல் படரும் உணரொலிகள்
ஆழ்மனதின் காதுகளுக்குள் இறங்குகின்றன

இருளின் ஒலிமுகங்கள்,

தனிமையின் பெருத்த மௌனத்தை
புல்லாங்குழலின் விழிகளில் இருந்து
கசியவிட்டிருக்கிறது

முகமறிய ப்ரியப்படும் இருளின் கடவுள்கள்
இரவின் கவிதைகளை வாசித்துக்காட்டுகின்றனர்
மொழி உருண்டோடும் பாதைவெளிகளில்
கனவுகளின் நிசப்தங்கள்

விரல்களின் அணைப்பில் பரவும் கதகதப்பில்
மெத்தைமேல் விரியும் இருளின் ஒலிகள்
பசித்த ஆட்டுக்குட்டியின் கண்களை
முத்தமிடுகின்றன

காத்திருத்தலுக்கான தலைவியின் காதல்
மௌனத்தின் சுடரொளியை மேயத்தொடங்கியது
அவளின் திசையில் எரிகிற காட்டுத் தீ
தனிமையின் ஊடலை பெருங்காடாக்கி எரிக்கிறது

மணம் வீசுகிற பாதையின் வனத்தில்
மலர் விரிகிற நுண்சப்தம்
இரவின் காதுகளில் விழுந்தெழுகிறது,
திசையெங்கிலும் தனித்துக்கிடக்கிற ஒற்றைமுத்தங்கள்
மலரின் மகரந்தவெளிக்குள் நிறைந்து கிடக்கின்றன

அமிழ்தல் அற்றுக்கிடக்கிற ஒலிமுகங்கள்
இரவின் மழையில் சடசடக்கின்றன
ஒலிஒளியிலான இரவென்பது
ஒவ்வொரு கண பிறத்தலிலான அழுகையின் முழுமை ..

- அதிரூபன்

Friday, 15 April 2016

நீரில் விழுந்த காடு

நீரில் விழுந்த காடு

- - - - - - -  - -

நிழலடர்ந்த வனநிலத்தின் மரங்கள்
வெய்யில்நேர பைக்கால் ஏரியில்
உறங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்

அலகு நீண்ட பறவையின் பசி
இந்த நீரின்மீனை கவ்விக்கொண்டிருப்பதான பிம்பம்
இந்த நீரில் துடித்திக்கொண்டிருக்கிறது

செவ்வெறும்புகளின் கூடொன்று
கொய்யாஇலையின் உடலெங்கிலும் படர,
நீரின் மேலே விழுந்த மரங்களில்
ஊறிக்கொண்டிருக்கிறன உயிர்கள்

வலுவிழந்து முறிந்த கிளையொன்றில்
ஒரு இலையின் உயிர் பிரிந்துபோக,
இன்னும் ஆதித்தோற்றத்து பிஞ்சிலைபோல் இருக்கிறது
நீரில் விழுந்த நிழலிலை

மரவிலங்கொன்று
காட்டுமரத்தின் மேலேறி உறங்க,
வயிறுப்பி இறந்துபோய் மிதக்கிற உடல்
இந்த விலங்காக இருக்கிறது

பறவையின் இறகுதிர்த்தலின் போது
சிறகுக்கூடை பிரிந்த இறகொன்று
நீரின் மேலே விழ,

ஒரு காடு குழைகிறது ..!

- அதிரூபன்

Saturday, 9 April 2016

ஜிப்ரானின் காதலி

செல்மாவின் விடியல்களில்
கனவுகள் உதிரத்தொடங்கியபோது
மர ஆடையின் ஈரத்திற்குள்ளிருந்து
இமைகள் இமைக்கத்தொடங்கின

வான்பொத்தல்களில் இருந்த
மூடுபனியின் இருட்டு
விழிகளுக்குள் சுவர்க்கம் பரப்புகையில்
ஏகாந்தத்தின் மூலையில்
ஆதிக்காதல் பேசத்தொடங்கியது

செல்மாவின்
கல்லறை பூக்களின் மகரந்திற்குள்
ஜிப்ரானின் இசை நிறைந்துகிடக்கிறது

சருகுமழையின் குவியலுக்குள்ளிருந்த
இறந்தகவிதை
ஒரு மின்மினிவெளிச்சத்தில் உயிர்ப்பாகிறது

நீ எழுதிய கவிதையின் எந்தவரியிலும்
நான் உயிரோடு இல்லை

காதலன் சுவைத்த உதட்டுநிறத்தில்
காதலின் விஷம் உயிருக்குள் நூலாகி
காமத்தின் ஆடையை நெய்துகொண்டிருக்கிறது

அதிகாலை இருளில் இதழ்விரிக்கிற கொழிஞ்சிக்காட்டுக்குள்
உன் இளமையின் முத்தம் ஒன்றைத் தேடித்திரியும்

உன் முத்தங்களை வர்ணப்பூச்சிக்கு பருக்கு
அவைகள்
என் கல்லறைச்செடியின் ஆகச்சிறந்த காதல்வாசிகள்

கனவுகளுக்குள் விளைந்த இரவுகள்
உன் கம்பளியை கேட்கின்றன

சின்னதாய் கட்டிப்பிடி
உன் அருகம்புல் ரோமச் சிலிர்ப்புக்குள்
செல்மாவின் இறந்த விழிகள்
திறந்து மூடட்டும்

கொஞ்சமாய் அவைகளை காதல்செய்

- அதிரூபன்

Tuesday, 29 March 2016

சவ அறை

என் அறையின் முகத்தில் சவவாசணை

- - - - - - -

நீங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த
ஒரு தற்கொலையின் கயிற்றில்
ஒரு பிணம் வாய்திறக்கிறது

அது,
என் ஆதிநாவின் இறுதிமொழியை
அறைசுவர்களில் முகங்களில் பூசுகிறது

என் வாழ்நாள் சூன்யத்தை
ஒரு கடிதத்தில் நிறப்புவதுதான்
தற்கொலையின் சுவையென நினைக்கிறேன்

எல்லா ரகசியங்களையும்
ஒரு காகிதத்தில் தெரிந்துகொள்ள இருக்கிற நீங்கள்
ஆழ்மன வீரியம் மிக்கவர்தான்

மனம் வலித்து அழுகிற
கடைசியத் துளியின் இருப்பு
தற்கொலையாகத்தான் இருக்கிறது
ஒருபோதும் வாழ்வின் நீதியை
இந்தக்கயிறு ஏற்றுக்கொள்ளாது

அநீதிகளின் கசப்புத்தன்மையில்
ஒரு விஷமிடர் கலந்திருப்பது
மரணத்தை சுவைக்கத்தான்

யாமம் அச்சுறுத்துகிற
இந்தப்பேய்யிரவின் பம்மிய வெளிச்சத்தில்
என் ஆன்மா அலைந்து திரிவதை
நீங்கள் காணக்கூடும்

அது
உணர்த்துகிற பயத்தின் உச்சம்
உங்கள் உயிர் பற்றிய
இருதயத்துடிப்பு தான்

கழிவறையின் நூலாம்படையில் தொங்கிக்கொண்டிருக்கிற
எட்டுக்கால் பூச்சியின் வயிற்றுப்பகுதியில்
என் ஆன்மா மறைந்தே வாழும்

கொஞ்சம் பொறுத்திருங்கள்

இலைகள் சருகாகும் காலத்திற்குள்
ஒரு கட்டில் உதைக்கப்படும்
கதவுகள் உடைக்கப்படும்

- அதிரூபன்

Tuesday, 22 March 2016

காட்டுத்தோழியின் பார்வையில்

காட்டுத்தோழியின் பார்வையில்

- - - - - - - - - -

மௌனம் புதைத்து எழுந்த
அடர்வனத்தின் வாசம் நீ
ஒரு மழையின் தெரிப்பில் பேசந்தொடங்குகிறாய்

எனக்குள்ளான உன்வரவை
காட்டில் தொலைந்துபோனவளின் பாதை என்கிறாய்

நீ அறியாத ஒரு வாசத்திற்கு
என்பெயர் வைத்திருப்பதாய் சொல்கிறாய்

ஒரு முயல்குட்டியின் முள்ளங்கிச்சுவைபோல் தான்
என் பேச்சின் வாசமும் என்கிற உன்னால்,
பொருள் தெரியாத பொய் அறிந்து மகிழ்கிறேன்

எனக்காக ஒரு இலையை பத்தரபடுத்தியிருக்கிற
உன் புத்தகங்களுக்கு மத்தியில்
உறங்கிப்போவதாய் உணர்கிறேன்

ஒரு நதியின் ஓட்டத்தில்
ஒன்றிக்கொண்டிருக்கிறது இருவரின் பிம்பம்,
நாம் இணைந்த நீரில்
பல முள்ளில்லாத மீன்குஞ்சுகள்
நீந்திப்போவதன் ரகசியத்தை
என் செவிமடலுக்கருகில் கிசுகிசுக்கிறாய்

இந்த மீன்குஞ்சுகளின் குரல்வளைக்குள்
நம் பாத அழுக்குகள் ஒன்றுசேர்வது
என் ஆசைக்குள் நீ மூழ்கிவிட்டதாய் எண்ணுகிறேன்

மரக்குகையொன்றில்
கிளி மறைத்துவைத்திருந்த
கொய்யாப்பிஞ்சினை
எனக்காக திருடி வந்து நீட்டுகிறாய்

என் காட்டுவழிகளில்
உன் பாதவடிவத்தில்
புலியொன்று திரிகிறது என்கிற உன்பேச்சை,
நம்பித்தான் ஆகவேண்டும்

இந்தப் பெருங்காட்டை
ஒரு விதைக்குள் திணித்து
மென்று கொண்டிருக்கிறேன்,
உன்னை மட்டுமே சுவைத்துக்கொண்டிருக்கிறேன்
என்கிற உன் வனக்குரலைத்தான்,
நான் காதலிக்க விரும்புகிறேன் ..

- அதிரூபன்.

Sunday, 20 March 2016

இருள்நிறதாகம்

இருள் நிற தாகம்

- - - - - - - - -

நிலவின் குளிரில் மேய்ந்துகொண்டிருக்கிற விலங்குகள்,
மோகப்பசியின் உடல்சூட்டிற்குள்
தன்னை பொருத்த நினைக்கின்றன

நிறமற்ற பூக்களின் மகர்ந்தத்திற்குள்
பூச்சி வடிவிலொரு காமம் இறங்கி,
தன் பிறப்புநாக்கிலிருந்து பெருங்கதை பேச
காம்புகள் பெருத்து நிறைமாதமாகின்றன பூக்கள்

பச்சையத்தின் வேர்களுக்கு
காதலிக்க சொல்லித்தருகிற ஆகாயத்தின் நீர்த்துளி,
பெரும் மின்னல் வெளிச்சத்தில்
முத்தமிட நாநீட்டுகிறது

வெய்யில்பாறையின்
இலைஇல்லாத பிறந்த செடிகளின் ரோமங்கள்,
சூரியனை மென்று உடலரும்புகிற ரகசியம்
நான் மட்டும் அறிவேன்

உடல் திறந்து பார்த்து
நிறைந்திருக்கிற காற்றின் உயிரில்
இருள்நிறக் காமம் கலந்திருப்பதன் அவசியம்,
எனக்கும் உனக்கும் சம்பந்தப்பட்டது..

- அதிரூபன்

Saturday, 5 March 2016

இரவல் தேடி

இரவல் கேட்டு செவி நீட்டுகிறது இரவு

அடர்மௌனத்திலிருந்து
ஒரு பறவையின் சிறகசைவு சிதறுகிற தெரிப்பு
இந்த வானத்தின் எல்லா திசையிலும் தான்

திசை தேடிச் சிறகுவிரிக்கும்
ஆக்காட்டியின் இலந்தைப்பழக் கண்களில்
ஒரு கருப்புவனம்
வானில் சத்தமிட்டுக்கொண்டே பறக்கிறது

நிர்வாணமரத்தின்
கிளைமுறிந்த கொம்பில்,
இரு மூக்குநீண்ட பறவையினப் பறவைகள்
மரத்தின் ஆடையை அணிந்து
இரவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு காதல் செய்கின்றனர்

கூண்டுப்பறவையொன்று
பாடத்தொடங்கியது,
அதன் குரலின் அழுகையில்
ஒரு வானம் வருந்திக்கொண்டிருப்பதாக
இந்த இரவு எனக்கு மொழிபெயர்க்கிறது

இப்போதுதான் சிறகுமுளைத்த மகிழ்ச்சியில்
பறக்கத்தொடங்கிய ஒருபிஞ்சுஇளம் குழந்தை,
வலையின் வானத்தில் மாட்டிக்கொண்டதன் ரகசியம்
என் செவிகளை ஊமை ஆக்கியது

தூங்கிக்கொண்டிருக்கிற
குழந்தையின் கைவிரல்கள்,
கனவில் பட்டாம்பூச்சியை தொட நீளுகிறது.
இந்தச்சுகம் மட்டுமே
பறத்தலுக்கான சிறைபிடியை
ரசிக்க கற்றுத்தருகிறது ..

- அதிரூபன்