நிழல் உதிக்கும் மலர்கள்
- - - - - - -
தீவு நிலத்தில்
காணப்பெறாத மலரொன்றை
என் உள்ளங்கையின் ரேகைகளுக்குள் விளைவித்து,
நீ துயிலிழந்த படுக்கையறையில் பத்தரபடுத்துகிறேன்
மருதாணிக்காடொன்றில் தொலைந்துபோன ஜீவன்
என் உடலை விழித்திருக்கச் செய்கிறது
உன் படுக்கையறை மலரின் வாசம்
என் விழிகளில் வழிதேடுகிறது
நித்திரை அற்றுப்போன நம் விழிகள்
இருளின் பெரியமூங்கில் கூட்டொன்றில்
கனவுகளை ஈனுகின்றன
பிரசவித்த கனவுகளின் உடலில்
தீவுமலர்களின் வாசம்
மேகங்களின் காதுக்கருகில் நிலா உறங்குகிறது
அது உறங்கி உறைகிற இருளில்
மலர்கள் திசைகளை மேயத்தொடங்கின
நீர்காகமொன்றின் நிறத்தில்
ஒரு காடு விழிகளுக்குமேல் படர்வதை உணர்கிறேன்
என் இமைத்தாவரத்தில் உதிரத்தொடங்கிய பூவின்சாயல்
உன் படுக்கையறை மலரோடு கலந்திருக்கிறது
இருள் சரிகிற அதிகாலையின் வெயிலில்
தீவுநிலமலர் உன் கூந்தலுக்குள் நிழல் பரப்பும்
மீண்டுமாய் ஒருபெரும்வாசத்தில்
காட்டுக்குள் தொலைந்துபோனவனின் பாதையை
இந்தமலர் உனக்கு வழிகாட்டும் ..
- அதிரூபன்
No comments:
Post a Comment