Wednesday, 20 January 2016

ரோஹித்

நட்சத்திரங்களின் நிழலொன்றில்

உயிர் விலகி ஓடுவதென்பது அகாலத்தின் நீட்சியில்
காலம் வரையறுக்கிற இயற்கையின் இயல்புநிலை என
நம்பமறுக்கிற அறியாமை இல்லாத
ஏதோ ஒரு எளிய மனகணம் தான், கொலை தற்கொலை யென
விபரீத பிறமன உளைச்சலை தன்உடல்வருத்தி,
உயிர் பறத்தலுக்கு முந்தைய கணத்தில் தீர்மானிக்கிறது

தனிமனிதனால் மிக தைரியமாக அல்லது மிகமிக கோழைத்தனமாக முடிவெடுப்பது தற்கொலையென்பதை தாண்டி,
தன்மரணம் காலத்தின் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாது
தன் சுயம்தவிர்த்து இனம் சார்ந்து பேசப்படவேண்டும் என்கிற கடைசிய மனோபாவம்
எந்த நிலையை எந்த ஆறுதலை அந்த வெற்றுடம்பிற்குள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

உயிருக்குள் நடுங்கிக்கொண்டிருந்த உங்களது கடைசி எழுத்துக்களின் முன், என் ஈரமனதை வைத்துவிடுகிறேன் ரோஹித்.

எழுத்தாளனாக வேண்டுகிற உங்களது மனம் , அது அனுபவித்த கடைசிய நொடி, நீங்கள் ரணப்பட்ட அந்த இருதய மனவலி, கடைசியாக முடிவுசெய்த உங்கள் மரணம் ....
அந்த ஞாயிறு பிழிந்த உங்கள் மனதின் ஞானம், இந்த என்தனிமையில் மேய்ந்துகொண்டிருக்கிறது ரோஹித்.

நீங்கள் சொன்னதுபோல, காயப்படாமல் அன்பு பெறுவது கஷ்டமான ஒன்றுதான்..

நான் அன்பு வைத்திருக்கிறேன். உங்கள் காயத்தின் மீதும்.
உங்கள் மரணத்தின் மீதும்.
உங்கள் மீதும்....

ரோஹித் .. ரோஹித் .. ரோஹித் ..

Sunday, 10 January 2016

வனம் வாழ்தலுக்கானது

வனமெல்லாம் என்வானம்

-------------------

ஒரு அடர்ந்த கருப்பு பாதை. இருளின் முகத்தை அணிந்துகொண்டு மர உயிர்களின் பூரண இருப்புக்குள் நுழைந்து, மனம் விரும்புகிற ஒன்றின் மடியில் துயில, நெடுநாட்களுக்கான ஒரு பிரியம் இன்று பிறக்கப்போகிறது. பசுமைகளை பூசியிருக்கிற ஒரு பச்சைக்காடு. சருகுகளை வழித்தடங்களில் பரத்தியிருக்கிறது காடொன்றின் வயது.ஆன்மா வந்துசெல்கிற பாதையை எந்தக்காடும் உருவாக்கிவைத்திரிக்கவில்லை.வழியெங்கும் இலைகளின் உயிர் சருகுகளுக்குள் சங்கமிக்க, கால்தடங்களுக்குள் சருகு நொருங்கும் கணத்தில் இறந்தஇலைகளின் உடம்பு தெரித்து வழிபிறக்கிறது. வனத்தின் முற்றத்தில் நுழைந்திருக்கிறேன். ஒரு தனிஉயிர் இந்த உயிர்கடலில் நுழையநினைப்பது எத்தனை பிடித்தமானது.? வனத்தின் எல்லைத்தீண்டலெங்கும் உயிர்களின் வாசம். இந்த உயிர்களின் பாதையில் பயணிப்பதுதான் எத்தனை அரிதானது.? அரிதுக்குள்ளே ஆன்மா நுழையவிரும்புகிற விருப்பம்தான் எனக்கும் வாய்த்திருக்கிறது. வனத்தின் வாது நுழைகிறேன். ஒரு பிரபஞ்சத்தின் இருப்பை இந்த வனம் தனக்குள் வைத்திருக்கிற ரகசியம்தான் அலாதியானது.நிறங்களின் ஊடே சலனங்களை ஏற்படுத்தும் அரூப வனநிலத்தில் இப்போது அமர்ந்திருக்கிறேன்.வனத்தின் மடியில் நின்றுகொண்டிரிக்கிற பிரியம் என் வாழ்நாள் பூரணம் அல்லவா !?  உயிர்களை தோற்றுவிக்கிற உறுப்பு வனங்களின் வானத்தில் தெரிகிறதே! அந்த நிர்வாணத்தின் ரகசியம் தானே இந்த வனத்தின் ஆச்சர்யம்! புலன் விரும்புகிற எண்ணற்ற ஓசையும் வாசமும் பார்வையும் காட்சியும் இந்த வனலோகத்தில் லயித்திருக்கிற சௌகர்யம்தான் என்னை இந்தவெளியில் வாழவிடுகிறது. வனமரங்களின் காதுகளில் இறங்கும் மௌனத்தைத்தான் இப்போது நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எவ்வளவு ரம்மியமான மௌனம். இந்த மௌனவெளி தன்னை ஈர்த்துக்கொள்கிற பேரதியபுதுமையை உணர்வுப்பூர்வமாக தரிசிக்கிற தற்சமயம் நான் வனங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன்தான். ஈரம் ஊரிப்போன வனாந்திர அடரின்வெளியில் நடந்துகொண்டிருக்கிறேன்.ஒரு பெரியவானம் இந்தப் பெரிய வனத்தில் அதன் ஈரநீரை மழையென கொட்டிஇறக்கிய எதார்த்தம், கொண்டாடக்கூடய இயல்தான்.அடர்மரங்கள் தலைதொட்டு மரக்கிளைகள் தாண்டி கிளைஇலைகள் வருடி இலைஒட்டிய ஈரமழை இந்த வனத்தின் மடியையும் நனைத்ததுதான் ஆச்சர்யம். ஒரு பெயர்தெரியாத பறவையின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் குரலின் அர்த்தம் என்பெயர்தான். என்னைத்தான் அந்த பறவை அழைக்கிறது.அந்தப்பறவையின் சிறகுகளில் இருக்கிற அடர்ந்த இறகுக்காடொன்றை நினைத்துப்பார்க்கிறேன்.அதன் கதகதப்பை உணர்ந்து என்வெளியின் வனபூமியில் அந்தக் குரல்முகத்தை மரங்கள்தோறும் தேடி தோற்கிறேன்.இந்த புதிய இருப்பு எந்த பிரபஞ்சத்தின் சாயலிலும் இருந்திடாது.தன்னை ஏந்தியிருக்கிற அன்னையின் மடி இப்படித்தான் இருந்திருக்கும். இந்த வனத்தின் தாவரநெரிசலில் நடந்துபோகிற தருணம், உயிர்களின் ஓசை செவிகளில் விழுகிறது. உயிர்களின் ஓலம் சங்கீதத்தை இறைக்கிறது. மறைபொருளான ஏதோவோர் இறை, இந்த வனத்தின் ஓசைகளுக்குள்ளும் தான் இருக்கிறது. மர இலையொன்றில் ஒரு பெருமழை விட்டுவைத்துவிட்டுப்போன ஒரே ஒருத்துளி. தன் இருப்புக்குள் அடக்கிவைத்திருக்கிற துளியின் ஈரம், ஈரத்திற்குள் குளிர்ந்திருக்கிற சொட்டுக்குளிர்மை, இந்தக்குளிர்மை உடுத்திஇருக்கிற துளியின் நெழிவு வாழ்தலுக்கானது தானே ! வனத்தின் நிறத்தை துள்ளியமாகக் குறிப்பிட்டால் மழைஇரவொன்றின் கருப்புதான்.இந்தக்கருப்பு என் கண்களில் தெரிகிறது.கண்களில் நுழைகிற இந்த நிறம் ஒரு இருட்டுவாசத்தை எப்போதுமே கசையவிட்டிருக்கிறது தான். ஒருப்பெருவனத்தில் வழிதேடி இருட்டை உணர்கிற மாகணம் பயம்தான். இந்தபயம் இருட்டை நேசிக்க கற்றுத்தருகிறது. மனிதநிழல்களின் கறைபடாத இந்தபெருவனத்தின் உள்ளே வாழ்வது எத்தனை மௌனமானது?பயமானது?அழகானது? இந்த வனவெளியொன்றில் வாழ்தலுக்கான பூரணத்தை தனியாக உணர்வதென்பது சுகம்தான்.பிரபஞ்சப் பெருவெளியிலிருந்து ஒரு வனநிழலின் வாழ்ந்துபார்ப்பதென்பது புதுமையானதுதான்.
நம் ஆதிச்சுவையை தீண்டியருள வனத்தின் கூடொன்றில் வாழ்ந்துபார்க்கலாம் ...

- அதிரூபன்

Wednesday, 6 January 2016

தொட்டுப்பார்த்திருக்கிறீர்கள் தானே.!?

ஒரு மெல்லுடலி,
அதன் ஜவ்வுத்தசையால்
ஈரங்களை குலப்பி,
வழித்தடங்களில் முத்தமிட்டு நகர்வதையும்
அதன் சுருளியோட்டை மலையெனச் சுமப்பதையும்
இருகொம்பு நீட்டி திசைகளை உசுப்புவதையும்
நீங்கள் தொட்டுப்பார்த்தீர்கள் தானே .? !

வைலட் நிறக் கனவு

பெரும்பசியினூடே ஒரு மாமிச நிர்வாணம்

- - - - - - - - - -

யூகலிப்டஸ் மரங்களின்
சருகு குலைத்த புதைமேட்டினுள்ளே
நீள்விழிகளுடைய நிர்வாணப்பெண் ஒருத்தி
யுகாந்திர உறக்கத்தினுள் நுழைந்திருக்கிறாள்

வனம் அதிரும்
ஒருப்பெருங்கனவொன்றில்
பைத்தியக்காரனொருவனின்
இறைப்பைக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது
ஆதிய நாட்களுக்கான பெரும்பசி

கனவொன்றில் நுழைந்திருக்கிற
பித்துப்பிடித்தவனின் ஆதியபசி
வனத்தின் எல்லா உயிரையும் விழுங்கிவிடும் அளவுக்கு
சிறுகுடல் நிறம்பிய பெரும்பசி

குடல்கிழியும் பசியுடையவனின்
ஒரு போதைக்கிறக்கம்,
சிறுகுடலை இழுத்து
முள்பழத்தின் தீஞ்சுவை பருக,
அதிர்ந்துபோய் நிர்க்கிறது
கனவொன்றில் வந்த வைலட்நிற வனம்

பசியுடையவனின் கருநீளநாக்கு
மாமிச உடலின் குருதிவாடை தேடி
பைக்கால்ஏரிக்கு பின்னே இருக்கிற அடர்வனத்தினுள்
ஓநாய்குலத்தின் படுக்கைக்குள் நுழைகிறது

ஒரு கிழட்டு ஓநாயின் நாசியில்
மனிதவாசத்தின் தீட்டு இறங்க,
சருகு மிதிபட்டு நொருங்கும் வனத்தினுள்
பீலைவிழிகளின் அகட்டுப்பார்வை விரிகிறது

கிழட்டு ஓநாயின் கண்நரம்பொன்றின் உயிர்
தன்னினம்இல்லாத இரண்டுகால் ஜீவனொன்றை
வனத்தினூடே கண்டு,
மௌனவேகத்தில் தலையை கவ்வ
தரையிலிருந்து தலைதூக்குகிறது

பைத்தியக்காரனின் ஆதியப்பசியை
மாமிசப்பிராணி பற்களோடு தாவுகையில்,
யூகலிப்டஸ் மரங்களினூடே துயில்ந்தவள்
ஒரு பெருமூச்சின் சீற்றத்தோடு
சருகுகளை சிதறவிட்டு விழித்து பார்க்கிறாள்

அவள் நிர்வாணத்திற்கெதிரே
ஒரு யூகலிப்டஸ் காடும்
ஒரு அரையுடை பைத்தியக்காரனும்
பெரும்பசியுடனே நின்றுகொண்டிருக்கிறார்கள் ...

- அதிரூபன்.

Monday, 4 January 2016

குஞ்சிறகுகள்

குஞ்சு ஜீவ ஸ்மைலிகள்

- - - - - - - - - - - - -

காலை ஒளியின் கதிர்கள்
நடனமாடுகிற வெள்ளைநிறப் பொழுதில்
அதிப் ப்ரயாசப்படுகிற துளியின் குளிர்மை
அனிச்சையுணர்த்தி புல்  கண்விரிக்க
ஒரு வானம் அந்நாந்து பார்க்கிற கனவு
எனக்குள் ஊடுறுவுகிறது

எலிக்குஞ்சுகளின் முட்டைகளில்
செடி முளைக்கிற ஒரு தேசத்தில்
என் கனவு பிறந்திருக்க,
ஈரத்தலையை
ஒரு கார்கால இரவில் உதறிக்கொண்டிருக்கிற மனுஷியை
அக்கணம் நான் புணர்ந்திருப்பதாக
ஒரு பழையநினைவு வந்துசெல்கிறது

மஞ்சள் நிற அந்திச்சாயலிலொரு பொழுதில்
என் குளத்தின் தவளைகள் எழுப்புகிற புணரொலியிலிருந்து
ஒரு கூச்சம் குளநீரில் நனைந்து
கரையேறுகிற ஒரு தவளையின் நிழலில்
ஒரு குட்டி பிறந்திருக்கிறதாக வந்தக்கனவில்
நான் என் கண்களை விட்டு வெளியே விழுந்துகிடந்தேன்

வெண்ணை ஒழுகுகிற பானையிலிருந்து
ஒரு பசுவின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதாய்
நம்பப்படுகற கனவிற்கு அருகில்,
இறந்துகிடக்கிறவளின் மார்புகளை
சப்பிக்கொண்டிருக்கிற குழந்தையின் பசி
ஆதரவற்று கிடக்கிறது

எறும்பின் தடங்களில்
வந்து அமர்கிற ஒரு ஈரக்காற்று
யானையின் துதிக்கையிலிருந்து கொட்டிய குட்டிமழையில்
நனைந்திருக்கிறது

- அதிரூபன்

குஞ்சிறகுகள்

குஞ்சு ஜீவ ஸ்மைலிகள்

- - - - - - - - - - - - -

காலை ஒளியின் கதிர்கள்
நடனமாடுகிற வெள்ளைநிறப் பொழுதில்
அதிப் ப்ரயாசப்படுகிற துளியின் குளிர்மை
அனிச்சையுணர்த்தி புல்  கண்விரிக்க
ஒரு வானம் அந்நாந்து பார்க்கிற கனவு
எனக்குள் ஊடுறுவுகிறது

எலிக்குஞ்சுகளின் முட்டைகளில்
செடி முளைக்கிற ஒரு தேசத்தில்
என் கனவு பிறந்திருக்க,
ஈரத்தலையை
ஒரு கார்கால இரவில் உதறிக்கொண்டிருக்கிற மனுஷியை
அக்கணம் நான் புணர்ந்திருப்பதாக
ஒரு பழையநினைவு வந்துசெல்கிறது

மஞ்சள் நிற அந்திச்சாயலிலொரு பொழுதில்
என் குளத்தின் தவளைகள் எழுப்புகிற புணரொலியிலிருந்து
ஒரு கூச்சம் குளநீரில் நனைந்து
கரையேறுகிற ஒரு தவளையின் நிழலில்
ஒரு குட்டி பிறந்திருக்கிறதாக வந்தக்கனவில்
நான் என் கண்களை விட்டு வெளியே விழுந்துகிடந்தேன்

வெண்ணை ஒழுகுகிற பானையிலிருந்து
ஒரு பசுவின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறதாய்
நம்பப்படுகற கனவிற்கு அருகில்,
இறந்துகிடக்கிறவளின் மார்புகளை
சப்பிக்கொண்டிருக்கிற குழந்தையின் பசி
ஆதரவற்று கிடக்கிறது

எறும்பின் தடங்களில்
வந்து அமர்கிற ஒரு ஈரக்காற்று
யானையின் துதிக்கையிலிருந்து கொட்டிய குட்டிமழையில்
நனைந்திருக்கிறது

- அதிரூபன்

Sunday, 3 January 2016

அகாலத்தின் ஓசை

அகாலத்தின் மொழி
என்னுள் பேசப்படுகிறது

ஒரு ரோபோவின் குரலை
ரசித்துக்கொண்டிருக்கிற காதுகளில்,
என் ஜென்மத்திற்கான குரல்
புல்லாங்குழலில் இருந்து கசிந்து விழுகிறது

நம்பமறுக்கிற கனவொன்றில்
நீரின் மேலே நடந்துசெல்கிற
பைத்தியக்காரனாக தெரிகிறவனின் நிழலை
அலைகள் அப்படியே வைத்திருக்கிறது,
தற்சமயம் மிதந்துகொண்டிருக்கிறது அவனின் அரூபநிழல்.

வனத்தின் நடுவில்
சருகுகுலைத்த ஒரு வைலட்நிற மெத்தையில்
நிர்வாணத்தின் உடையை உடுத்தியிருக்கிற
மிருகங்கள் புணராத ஒரு கற்பை,
ஒரு பகல்காற்று புணர
வனத்தினுள்ளே ஒருபெரும் மழை
தரையிலிருந்து மேலே துயில்கிறது.

நத்தையின் கொம்புகள் இரண்டு
திசைகளை உசுப்பி உசுப்பி
ஈரத்தடங்களில் முத்தமிடுகிற நிகழ்வு,
வானவில்லுக்கு முத்தத்தை பறக்கவிடுகிற குழந்தையை
நியாபகப்படுத்துகிறது.

நிலாக்கள் உடைய தேசத்தை
ஒரு குழந்தையின் பென்சில்
வரையத்தொடங்கிய பௌர்ணமியில்,
கிணற்றொன்றில் முட்டை வடிவில் மிதப்பது
யாதென்னு தெரியாது போகிறது யாவருக்கும்.

பூனையின் கண்களில்
கண்மை தடவுகிற பெண்ணிற்கு
உதடுகளை நீட்டுகிறது
ஒருசுட்டிக்குட்டி தூங்குமூஞ்சி.

- அதிரூபன்