Saturday 21 May 2016

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

முதிர்சருகில் ஒட்டிக்கிடந்த நத்தையின் காமம்

- - - - - - - - -

தவளையின் குரல்வளைக்குள்
வியர்த்துப் பெய்கிற மழை
பின்னிரவில்
கூடாரப்பொதிசுமந்த நத்தையின் தேகத்தில்
ஈரத்தை உலர்த்துகிறது

பிசுபிசுப்பணிந்த உடற்நாவால்
சைக்கிள் தடங்களை வரைந்து செல்கிற உயிர்
சுருளியோட்டின் மாகுகைக்குள்
ஐம்புலனின் தாகத்தை கொண்டடைக்கிறது

இருளடர்ந்த நத்தை விழிகளுக்குள்
ஜஸ் ஈரத்தின் உரு ஊறுவது
மழைபோர்த்திய மணல்துகளென நெழிகிறது

இனம்தேடி கொம்பு நீட்டும்
பெருஉடலின் ஜவ்வுக்காமம்
ஒரு முதிர்சருகின் ஓசையில் ஒட்டிக்கிடக்கிறது

மழைமழையென வேண்டிதிரிந்த
இரவுநேரத்துக் கம்பளிக்குள்
ஒரு நத்தைக்குடும்பம்
காமம் உண்பது
மழைநீர் உறைநீராகும் காலம்வரை நீடிக்கும் ...

- அதிரூபன்

No comments:

Post a Comment